’அதோமுகம்’ - விமர்சனம்
ஊட்டியில் நாயகன் எஸ்.பி.சித்தார்த், தனது மனைவி நாயகி சைதன்யா பிரதாப்புடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். மனைவியை எப்படியாவது ஆச்சரியப்படுத்திய எண்ணி அவரது செல்போனில் அவருக்கே தெரியாமல் APP ஒன்றை பதிவிறக்கம் செய்து அதன் மூலம் அவரது நடவடிக்கைகளை பதிவு செய்து, அதை வீடியோ தொகுப்பாக உருவாக்கி பரிசளிக்க முடிவு செய்கிறார்
மனைவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க நினைக்கும் சித்தார்த்திற்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. மனைவியை சந்திக்க யாரோ தன் வீட்டுக்கு வருவதும், அவர்களுடன் மனைவி உரையாடுவதும் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக இருக்கிறது.
ஒரு கட்டத்தில் நாயகி சைதன்யா தன்னை சந்திக்க வந்த இளைஞரை கொலை செய்துவிடுகிறார். இந்த கொலைப் பழி நாயகன் சித்தார்த் மீது விழுகிறது. இறுதியில் நாயகன் சித்தார்த் மனைவி சைதன்யாவிற்கு கொலை செய்யப்பட்ட இளைஞருக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதை கண்டுபிடித்தாரா? இல்லையா?என்பதே ’அதோமுகம்’ படத்தின் கதை.
நாயகனாக நடித்திருக்கும் எஸ்.பி.சித்தார்த் அறிமுக நாயகன் என்று சொல்ல முடியாத அளவிற்கு எதார்த்த நாயகனாக நடித்திருக்கிறார். தன்னைச் சுற்றி ஏன் பிரச்சினை மேல் பிரச்சினை வருகிறது என்று புரியாமல் குழம்புவது,கோபமடைந்தாலும் அதை வெளிக்காட்ட முடியாமல் தவிப்பது, அனைத்தும் தெரிந்தும் எதுவும் செய்ய முடியாமல் நிற்பது பிரச்சினையில் இருந்து தப்பிக்க துடிப்பது, சிறையில் வாடுவது என அனைத்து உணர்வுகளை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் சைதன்யா பிரதாப், ஆரம்பத்தில் அப்பாவியாக இருப்பவர் அடுத்தடுத்த காட்சிகளில் தனது நடிப்பின் மூலம் மிரட்டுகிறார்.கணவனை சுட்டுக்கொல்ல துப்பாக்கியை எடுப்பவர், கண நேரத்தில் கோணத்தை மாற்றி இன்னொருவனை கொல்லும் காட்சியில் உறைய வைக்கிறார் படத்தின் இறுதிக்காட்சியில், தன்னைப் பற்றி கணவனிடம் கெத்தாக விவரிக்கும் காட்சியிலும் அசத்துகிறார். சிறைக் கைதியாக வரும் அருண்பாண்டியன் படத்தின் இறுதி காட்சியில் தோன்றி நாயகனுக்கு துணை நிற்கிறார்.
சித்தார்த்தின் நண்பராக நடித்திருக்கும் ஆனந்த் நாக், அவரது அப்பாவாக நடித்திருக்கும் மேத்யூ வர்கீஸ், ஜே.எஸ்.கவி, பிபின் குமார், சரித்திரன் என மற்ற வேடங்களில் நடித்தவர்கள் அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக உள்ளனர் .
இசையமைப்பாளர் முரளி இசையில் பாடல்கள் கேட்பதற்கு இனிமை , சரண் ராகவனின் பின்னணி இசை படத்தின் கதை ஓட்டத்திற்கு துணை நிறைகிறது. அருண் விஜய்குமாரின் ஒளிப்பதிவு, க்ரைம் த்ரில்லருக்கு ஏற்ற அசத்தல்! அதோடு, மலை, காடு, பனிப்பொழிவு என அழைகையும் சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறது
கணவன் மனைவி உறவை மையமாக வைத்து ஒரு சிறப்பான சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தை தன்னாலும் கொடுக்க முடியும் என்று நிரூபித்து காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குனர் சுனில் தேவ் படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை விறுவிறுப்பாக படத்தை நகர்த்தி சென்றிருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
நடிகர்கள் : எஸ்பி சித்தார்த், சைதன்ய பிரதாப், அருண் பாண்டியன், அனந்த் நாக், சரித்திரன், ஜே.எஸ்.கவி
இசை : முரளி
இயக்கம் : சுனில் தேவ்
மக்கள் தொடர்பு : குமரேசன்
Comments
Post a Comment