பாயும் ஒளி நீ எனக்கு’ - விமர்சனம்
நாயகன் விக்ரம் பிரபு தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றை சொந்தமாக நடத்தி வருகிறார். சிறு வயதில் ஏற்பட்ட விபத்தால் கண்பார்வையில் குறைபாடு கொண்டவராக இருக்கிறார் குறைந்த வெளிச்சத்தில் கண் பார்வை தெளிவாக இருக்காது, அதிகமான வெளிச்சத்தில் மட்டுமே கண் பார்வை சரியாக தெரியும், இவருடைய சித்தப்பா ஆனந்த் தன்னம்பிக்கை கொடுத்து வளர்த்து வருகிறார்..
ஆனந்த் தனது மகள் திருமணத்திற்காக திருமண ஏற்பாட்டாளரான நாயகி வாணி போஜனை நியமிக்கிறார்.. வாணி போஜனை பார்த்ததும் காதல் கொள்கிறார் விக்ரம் பிரபு. பிறகு இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள். திடீரென விக்ரம் பிரபுவின் சித்தப்பா ஒரு கும்பல் கடத்தி அவர் கண்ணெதிரே கொலை செய்கிறது. இறுதியில் சித்தப்பாவை கொலை செய்தவர்களை விக்ரம் பிரபு கண்டுபிடித்து பழி வாங்குகிறாரா? இல்லையா? என்பதே ’பாயும் ஒளி நீ எனக்கு’ படத்தின் கதை.
நாயகன் விக்ரம்பிரபு. தோற்றம் மட்டுமின்றி நடிப்பிலும் வித்தியாசம் காட்டியிருக்கிறார். சண்டைக் காட்சிகளில் மிக அற்புதமாக பணி புரிந்திருக்கிறார் ஒரு பார்வை குறைவானவன் எப்படி செயல்படுவான் என்பதை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
நாயகி வாணி போஜன் ஒரு அமைதியாக வந்து கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார். வில்லனாக நடித்திருக்கும் டாலி தனஞ்ஜெயா மிரட்டலான நடிப்பை கொடுத்திருக்கிறார். பதவிக்காக என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடிய கொடூர குணம் கொண்டவராக நடிப்பில் மிரட்டுகிறார்.
விகாரம் பிரபு நண்பன் வேடத்தில் விவேக் பிரசன்னா, பாசமிகு சித்தப்பாவாக ஆனந்த், மக்களுக்கு உதவி செய்யும் அரசியல் தாதாவாக வேல ராமமூர்த்தி என பல படங்களில் பார்த்து பழகிய முகங்கள் என்றாலும் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் சாகரின் இசையில் பாடல்கள் கேட்பதற்கு இனிமை. பின்னணி இசை கதையோடு பயணித்திருக்கிறது ஒளிப்பதிவாளர் ஸ்ரீதரின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய அளவில் கைகொடுத்திருக்கிறது. நாயகனின் குறைபாட்டை காட்சிகள் மூலம் வெளிப்படுத்துவதோடு, அவருடைய பார்வை குறைபாடு எப்படி இருக்கும் என்பதை படம் பார்ப்பவர்களும் உணரச்செய்யும் விதத்தில் காட்சிகளை சிறப்பாக படமாக்கியுள்ளார்.
பார்வை குறைபாட்டை மைய கருவாக வைத்து ஆக்ஷன் படமாக கொடுத்திருக்கிறார் கார்த்திக் அத்வைத் , நாயகனுக்கு ஏற்படும் பிரச்சனைக்கான காரணமும் வலிமையில்லாமல் இருப்பது படத்தை வேகத்தை குறைக்கிறது.
Comments
Post a Comment