யாத்திசை’ - விமர்சனம்
யாத்திசை – தென் திசை எனும் பொருள்படும் சங்க இலக்கியச் சொல். பாண்டிய மன்னனான ரணதீரனுக்கும், எயினர்களுக்கும் இடையேயான போரை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம் தான் ’யாத்திசை’
7 ஆம் நூற்றாண்டில் பாண்டிய பேரரசை வெல்வதற்கு சேரன் தலைமையில் சோழப் பேரரசும் சேர்ந்து போர் புரிகிறது. இவர்களுக்கு துணையாக எயினர் மற்றும் வேளிர் போன்ற பழங்குடி கூட்டங்களும் இருக்கிறது. இந்தப் போரின் இறுதியில் ரணதீரன் பாண்டியன் தலைமையிலான பாண்டியர்கள் சோழக்கோட்டையோடு சேர்த்து மொத்த தென் திசையையும் கைப்பற்றுகிறது.
இதிலிருந்து தப்பிய சில சோழர்கள் காட்டில் மறைந்து வாழ்கிறார்கள்.அவர்களில் எயினர் கூட்டமும் ஒன்று. ரணதீரன் பாண்டியனை வென்று, மீண்டும் சோழ மண்ணின் அதிகாரத்தை கையில் எடுப்பேன் என சபதம் எடுக்கிறார் எயினர் குடியின் கொதி. பாண்டியனை வீழ்த்த சோழர்களின் துணையையும் நாடுகிறார். இறுதியில் ரணதீரனை கோதி வென்றாரா ? இல்லை கோதியை ரணதீரன் வென்றாரா ? என்பதே ’யாத்திசை’ படத்தின் கதை.
ரண தீரணாக ஷக்தி மித்ரனும், கொதியாக சேயோனும் உடல் மொழியிலும், நடிப்பிலும் வாழ்ந்திருக்கிறார்கள். பலி செய்யும் சாமியாராக குரு சோமசுந்தரம் குரல் ஏற்ற இறக்கத்தில் அற்புதமாக களத்தை காட்டுகிறார். படத்தில் சில குறைகள் இருந்தாலும் முற்றிலும் புதியவர்களை வைத்து இப்படி ஒரு வரலாற்று படத்தை தந்த முயற்சிக்கு டைரக்டரை பாராட்டலாம்.
நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவரும் மிக கடுமையாக உழைத்திருப்பது படத்தின் அனைத்துக் காட்சிகளிலும் தெரிகிறது. இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, உடை வடிவமைப்பு, கலை இயக்கம் என அனைத்துமே படத்திற்கு மிகப்பெரிய அளவில் கைகொடுத்திருப்பதோடு, அனைத்துமே கதையோடு ஒன்றி பயணித்து படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது.
இயக்குநர் தரணி ராசேந்திரன் ஏழாம் நூற்றாண்டில் தெற்கு திசையில் வாழ்ந்த பாண்டிய அரசாட்சி குறித்து புனை கதையாக உருவாக்கி இருக்கிறார், திரைக்கதை மற்றும் காட்சிகளை வடிவமைத்த விதத்தில், தற்காலத்து உலக யுத்த அரசியலை நினைவுப்படுத்தியிருக்கிறார் புதிய நடிகர் பட்டாளத்தை வைத்து இப்படி ஒரு படத்தைத் தயாரித்த குழுவினருக்கு பாராட்டுகள்
Comments
Post a Comment