*செங்களம் (வெப் சீரிஸ்) ; விமர்சனம்* 
திரைப்படங்களுக்கு சமமான வரவேற்பை தற்போது ஓடியில் வெளியாகும் தொடர்களும் பெற்று வருகின்றன. பெரும்பாலும் ஹாரர், திரில்லர், ஆக்சன் ஜேனர்களில் மட்டுமே வெளியாகி வந்த வெப் தொடர்களில் இருந்து விலகி சற்று வித்தியாசமாக, முழுக்க முழுக்க அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள தொடர் தான் செங்களம்.

சசிகுமார் நடித்த சுந்தரபாண்டியன் என்கிற ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் எஸ்.ஆர் பிரபாகரன் முதல் முறையாக இந்த வெப் சீரிஸ் ஏரியாவில் அடி எடுத்து வைத்துள்ளார். விருதுநகர் மாவட்ட பின்னணியில் கதை நகர்கிறது. ஒன்பது எபிசோடுகளாக உருவாகியுள்ள இந்த வெப் தொடரில் ஒவ்வொரு எபிசோடிலும் அன்று, இன்று என முன்பின் நடந்த நிகழ்வுகள் இரண்டுமே இடம்பெற்று பின்னர் வரும் எபிசோடுகளில் ஒன்றுடன் ஒன்று அழகாக தொடர்புபடுத்தப்பட்டு கோர்க்கப்பட்டுள்ளன.
கதையின் சாராம்சம் என்னவென்றால் ஒரு பக்கம் கலையரசன் தனது தம்பிகள் இருவருடன் சேர்ந்து மூன்று பேரை கொன்றுவிட்டு காட்டுக்குள் தலைமறைவாக இருக்கிறார். போலீஸ் அவரை வேட்டையாட முடியாமல் கையை பிசைகிறது. இதற்கு அடுத்ததாக மூன்று பேர்களை கொன்றுவிட்டுத்தான் சரணடைவோம் என வீராப்பு காட்டுகிறார் கலையரசன். 

இன்னொரு பக்கம் இதற்கு முன்னர் நடந்த கதையாக விருதுநகர் மாவட்ட  நகராட்சியில் 40 வருடங்களாக சேர்மன் பதவியை தக்க வைத்து கொண்டிருப்பவர் சரத் லோகித்ஸ்வா. இவருக்கு பிறகு இவரது மகன் பவன் என அடுத்தடுத்து தனிக்கட்சியாகவே மக்கள் செல்வாக்குடன் வலம் வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் பவனுக்கு இரண்டாவது மனைவியாக வாக்கப்பட்டு வருகிறார் கோடீஸ்வரி ஆன வாணி போஜன். இருவரும் ஒரு ஜாலி ட்ரிப்பாக கொடைக்கானல் செல்லும் வழியில் லாரி ஒன்றினால் விபத்தில் சிக்கி அதில் பவன் இறக்கிறார்.

சேர்மன் இல்லாமல் தவிக்கும் நகராட்சிக்கு புதிய சேர்மனை தேர்ந்தெடுக்கும் முயற்சியில் இறங்குகிறார் சரத் லோகித்ஸ்வா. ஒரு பக்கம் இன்னொரு மகனான பிரேம் தனக்கு அரசியலில் விருப்பம் இல்லை என்று சொல்கிறார். அதேசமயம் மகள் மானசா அந்த பதவிக்கு ஆசைப்படுகிறார். இன்னொரு பக்கம் அரசியல்வாதிக்கு மனைவியாக கொஞ்ச நாள் வாழ்ந்து விட்டதால் தானும் அந்த பதவி சுகத்துக்கு ஆசைப்படுகிறார் வாணி போஜன்.

ஒரு கட்டத்தில் அவருக்கு பதவி கைவிட்டுப்போகும் சூழல் ஏற்படுகிறது. அப்போது தனக்கு துணையாக அரசியல் தெரிந்த தனது கிராமத்து தோழி ஷாலியை அழைத்து வந்து தன்னுடன் தங்க வைக்கிறார் வாணி போஜன். ஷாலியின் புத்திசாலித்தனமான திட்டங்கள் மூலம் சரத் லோகித்ஸ்வாவை மீறி வாணி போஜன் நகராட்சி சேர்மன் ஆகிறார்.
அதன்பின் நடக்கும் நிகழ்வுகள் நம்மை அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி அடைய வைக்கின்றன. வாணி போஜன் இப்படி தன்னை மீறி பதவி ஏற்றதால் மாமனார் சரத் லோகித்ஸ்வா கோவப்பட்டாரா ? அல்லது அவரது நாத்தனார் மானசா அவரை பழிவாங்க துடித்தாரா ? இத்தனைக்கும் உதவியாக வாணி போஜனுக்கு துணையாக நின்ற ஷாலிக்கு என்ன கதி ஏற்பட்டது ? இந்த மூன்று கொலைகளை செய்துவிட்டு கலையரசன் இன்னும் யார் மூன்று பேரை கொலை செய்ய காத்திருக்கிறார் > யார் இந்த ஆர் பேர் ? இந்த கொலைகளுக்கான பின்னணி என்ன என்பதற்கெல்லாம் அடுத்தடுத்து வரும் எபிசோடுகளில் அங்கங்கே பதில் சொல்லப்படுகிறது. இருப்பினும் மீதம் வைக்கப்பட்டுள்ள இன்னும் ஒரு சில சஸ்பென்ஸ்களுடன் இரண்டாவது சீசன் துவங்கும் என தெரிகிறது.

இரண்டு மணி நேரம் சினிமா பார்ப்பதற்கே அலுத்துக் கொள்ளும் ரசிகர்களை கிட்டத்தட்ட 9 எபிசோடுகள் வரை தொடர்ந்து பார்க்க வைக்க வேண்டும் என்றால் கதையும் திரைக்கதையும் எவ்வளவு வலுவாக இருக்க வேண்டும் என்பதை இயக்குனர் எஸ்.ஆர் பிரபாகரன் நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார். அதனால் இந்த ஒன்பது எபிசோடுகளையும் தொடர்ந்து பார்த்தாலும் எந்த இடத்திலும் பெரிய தொய்வு என எதுவும் இல்லாமல் அடுத்தடுத்த எபிசோடுகளில் என்ன நடக்கும் என்கிற ஆர்வமும், எதனால் இந்த நிகழ்வுகள் நடக்கின்றன, இனிவரும் எபிசோடுகளில் அதற்கு என்ன காரணம் சொல்லப் போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பும் இயல்பாகவே இந்த வெப் தொடரை பார்ப்பவர்களுக்கு ஏற்பட்டுவிடும்.

அதனால் வெறும் இரண்டு மூன்று எபிசோடுகளை பார்த்துவிட்டு பின்னர் பார்க்கலாம் என நினைப்பவர்கள் கூட ஒன்பது தொடர்களையும் பார்த்துவிட்டு தான் அடுத்த வேலைகளை கவனிப்பார்கள். அந்த அளவிற்கு விறுவிறுப்பு குறையாமல் 9 எபிசோடுகளையும் இயக்கியுள்ளார் இயக்குனர் எஸ்.ஆர் பிரபாகரன்.

அடுத்ததாக இந்த கதையின் கதாபாத்திரங்களுக்கு தேவையான நடிகர்களை 100% கச்சிதமாக தேர்ந்தெடுத்ததற்காக அவருக்கு மீண்டும் ஒருமுறை பாராட்டுகளை தெரிவித்துக் கொள்ளலாம். இதுநாள் வரை நாம் பார்த்து வந்த கலையரசன் இந்த படத்தில் இன்னும் நடிப்பில் மெருகு கூடியிருக்கிறார். கோபமும் ஆவேசமும் கொண்ட இளைஞன் என்றால் இனி கலையரசன் முகம் தான் ஞாபகத்திற்கு வரும் என்பது போல தன்னுடைய கதாபாத்திரத்திற்கு நடிப்பால் வலு சேர்த்து இருக்கிறார்.

அழகுச்சிலையாக மெழுகு பொம்மையாக பார்த்து ரசித்த வாணி போஜன் இதில் அரசியலில் கைதேர்ந்த ஒரு பெண்மணியாக தனது கதாபாத்திரத்தை வெகு அழகாக பிரதிபலித்திருக்கிறார். அவர் மட்டுமல்ல அவருக்கு துணையாக தோழியாக நடித்திருக்கும் ஷாலி நிவேகாஸ் புதுமுகம் என்றாலும் தனது நடிப்பில் அது துளியும் வெளிப்படாமல் எதார்த்தமாக, கொஞ்சம் கம்பீரமாகவே தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இவர்கள் இருவரின் காம்பினேசனை பார்க்கும் போதே இது உடன்பிறவா சகோதரிகள் என்கிற கோணத்தில் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
இதுநாள் வரை வில்லனாக பார்த்து வந்த நடிகர் பவன் இதில் பாசிட்டிவான அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நம்மை அதிகம் கவர்ந்து விடுகிறார். நாயகன் நாயகியாரை தாண்டி இந்த வெப் தொடரை இன்னும் அதிக அளவில் தாங்கிப் பிடிப்பவர் என்றால் 40 வருட அரசியல்வாதியாக வீல் சேரில் அமர்ந்தபடியே அரசியல் செய்யும் சரத் லோகித்ஸ்வா தான். எந்த இடத்திலும் இவரது கதாபாத்திரம் மீது நெகடிவ் இமேஜ் படியாமல் அழகாக இவரை சித்தரித்துள்ளார்கள். 

குடும்ப அரசியல், அரசியலில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்கிற மனப்பான்மை என அனைத்தும் இருந்தாலும் எந்தவித எதிர்மறை குணங்களும் இல்லாதபடி இவர்களது கதாபாத்திரங்களை சித்தரித்ததற்காகவே ஒரு சபாஷ் சொல்லலாம். அது மட்டுமஅல்ல கிராமத்து அரசியல்வாதி என்றாலே வேலா ராமமூர்த்தி நடிப்பு பற்றி சொல்லவே வேண்டாம். அந்த அளவிற்கு எதார்த்தமாக பின்னி இருக்கிறார். 

மேலும் அவரது பிஏவாக வரும் பகவதி பெருமாள், மாவட்ட செயலாளர் ஆக வரும் முத்துக்குமார், கலையரசனின் தம்பிகளாக வரும் டேனியல் போப், லகுபரன், கோபக்கார போலீஸ் அதிகாரியாக வரும் அர்ஜய், கான்ஸ்டபிளாக வரும் சூப்பர் குட் சுப்பிரமணி என ஒவ்வொரு கதாபாத்திரமுமே இந்த கதைக்கு முக்கியமானது. அதை திறம்பட அனைவருமே செய்திருக்கிறார்கள். இன்னும் குறிப்பாக கலையரசனின் அம்மாவாக நடித்த விஜி சந்திரசேகர் நடிப்பு பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

இந்த வெப் தொடரின் இன்னும் இரண்டு தூண்களாக இருந்து தாங்கி பிடித்துள்ளவர்கள் ஒளிப்பதிவாளர் வெற்றிவேல் மகேந்திரன் மற்றும் அதிரடியான பின்னணி இசை அமைத்துள்ள தரண்குமார் இருவரும் தான். இவர்கள் இருவரும் சேர்ந்து இந்த வெப் தொடருக்கு இன்னும் விறுவிறுப்பை அதிகப்படுத்தி உள்ளனர்.

 இயக்குனர் எஸ்.ஆர் பிரபாகரன். நிச்சயம் ரசிகர்களுக்கு பிடிக்கும் 

Comments

Popular posts from this blog