ஓ மை டாக் – விமர்சனம்
ஊட்டியில் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த அருண்விஜய், அப்பா விஜயகுமார், மனைவி மகிமா நம்பியார், மகன் அர்னவ் ஆகியோருடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். தனது வசதியை மீறி மகனை உலகத்தரப் பள்ளியில் சேர்த்துப் பிடிக்க வைப்பதற்காக தனது வீட்டினை அடமானம் வைத்து அதற்கு வட்டி செலுத்தி வருகிறார் அருண் விஜய்.
தொடர்ந்து சாம்பியன் பட்டத்தை வென்றிருப்பவர் வினய், சாம்பியன் பட்டத்தை அடைய எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவர் தன்னிடம் இருந்த விலையுயர்ந்த நாய்குட்டி ஒன்று பார்வை இல்லாமல் பிறக்கிறது. அதை கொன்றுவிடும்படி தனது உதவியாளர்களிடம் கூறுகிறார் வினய். உதவியாளர்களிடம் இருந்த நாய்குட்டி தவறி சென்று அர்னவிடம் தஞ்சம் அடைந்து விடுகிறது. அர்னவ் அதற்கு சிம்பா என பெயரும் சூட்டுகிறார். அதற்கு கண் தெரியாத நிலையில் ஆபரேஷன் செய்து பார்வை வரவழைக்கிறான். சிம்பாவுக்கு பயிற்சி கொடுத்து அதை போட்டியில் பங்கேற்க வைக்கிறான். இறுதியில் போட்டியில் கலந்து கொண்ட சிம்பா சாம்பியன் பட்டம் வென்றதா? இல்லையா? என்பதே 'ஓ மை டாக்' படத்தின் மீதிக்கதை.
நடுத்தரக் குடும்பத்தலைவர் வேடத்தில் அச்சுஅசலாகப் பொருந்தியிருக்கிறார் அருண்விஜய், அவருடைய முன்கதை அவருக்குச் சிறப்புச் சேர்க்கும் விதமாக அமைந்திருக்கிறது.தாத்தா வேடத்தில் நடித்திருக்கும் விஜயகுமார் தனது அனுபவ நடிப்பை வெளிப்படுத்திருக்கிறார். நாயகி மகிமா நம்பியார் பாசமான தாய் கதாபாத்திரத்தில் அற்புதமாக பொருந்த்திருக்கிறார்.
முதல்படம் போலில்லாமல் மிகவும் பழகியது போல் எல்லாக்காட்சிகளும் மிக இயல்பாக நடித்திருக்கிறார் அர்னவ் விஜய் நாய்க்குட்டி சிம்பா மீது பாசம் காட்டுவது அதற்கு கண் பார்வை வரவழைப்பதற்காக பணம் சேர்த்து வைத்தும் அந்த பணம் பத்தாமல் போனதால் டாக்டரிடம் சென்று தன்னிடம் இருக்கும் சில்லறை காசுகளை கொடுத்து எப்படியாவது ஆபரேஷன் செய்து சிம்பாவுக்கு பார்வை தரும்படி கண்ணீர்விட்டு அழுவது என நெகிழ வைக்கிறார்.
சிம்பா எனும் நாய்க்குட்டி படம் நெடுக வருகிறது. நாமும் தூக்கிக் கொஞ்சலாம் என நினைக்குமளவுக்கு இருக்கிறது. அர்னவின் நண்பர்களாக வரும் சிறுவர்களும் அவர்களுடைய துடிப்பான நடிப்பும் படத்துக்குப் பலம். சேர்கிறது வில்லன் வினய் ராய் கதையை விறுவிறுப்பாக நகர்த்தி செல்லும் கருவியாக பயன்பட்டிருக் கிறார்.
கோபிநாத்தின் ஒளிப்பதிவு ஊட்டியின் இயற்கை அழகையும் கதையின் தன்மையையும் சரியாகக் காட்சிப்படுத்தியிருக்கிறது. நிவாஸ் கே பிரசனாவின் பாடல்கள் மற்றும் பின்னனி இசை ரசிக்க வைத்திருக்கிறது.
இயக்குனர் சரோவ் சண்முகம் கண் தெரியாத ஒரு நாயை வைத்து இன்டர்நேஷனல் அளவிலான பேட்டியில் அருண் விஜய்யின் மகனான அர்னவ் எப்படி ஜெயிக்கிறான் என்பதை அனைவருக்கும் புரியும் வகையில் படத்தை இயக்கியிருக்கிறார். கடுமையான உழைப்பால் எதையும் சாதிக்க முடியும் என்று சொல்லப்படும் எல்லா கதைகளும் ஜெயித்திருக்கின்றன
Comments
Post a Comment